Sunday 13 January 2013

புத்தாண்டு பந்தாட்டம்



புத்தாண்டு கொண்டாட்டத்தில் இவ்வளவு குழப்பமா?? “சித்திரை-1” தான் தமிழ் புத்தாண்டு என நாம் பிறந்தது முதல் இப்போது வரை கொண்டாடி வருகின்றோம். திடீர் என்று “தை-1” தான் தமிழ் புத்தாண்டு என ஒரு சாரார் சொல்கின்றனர். ஏன் இப்படி குழப்பம் பிறப்பிக்கின்றனர்? தமக்கான புத்தாண்டினை கூட அந்த இனம் குழப்பத்துடன் கொண்டாடுவது எவ்வளவு வேதனையானது. இந்த குழப்பம் தமிழர்க்கு மட்டும்தானா??

சற்று வரலாற்றினை திரும்பி பார்த்தால் இந்த குழப்பம் தமிழ் இனத்திற்கு மட்டும் ஏற்பட்டது அல்ல என்பது புரியும்.
யூதர்களால் ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தினை மையப்படுத்தி பின்பற்றப்பட்டு பின் இங்லாந்து, பிரான்சு போன்ற நாடுகளால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தண்டு தான் இன்று பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படும் “ஜனவரி-1”. ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மதமும் மொழியும் பழக்கங்களும் திணித்து விடப்பட்ட சூழலில் பெரும்பாலன நம்மைப் போன்ற நாடுகள் “ஜனவரி-1”னை முக்கியத்துவப்படுத்துகிறோம். இந்த ஆங்கில புத்தாண்டே வரலாற்றில் பந்தாடப்பட்டது உண்டு.
 

கி.மு., கி.பி. என்ற குழப்பத்திற்கு முதலில் வருவோம். ஏசு கிருஸ்து பிறந்த தினமான “டிசம்பர்-25”க்கு பிறகே கி.பி. துவங்குகின்றது. அன்றைய தினமே புத்தாண்டு என யூதர்கள் ஆரம்பத்தில் கொண்டாடி வந்தனர். பிரான்சின் ஒரு சில பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் “மார்ச்-25 முதல் ஏப்பிரல்-1" முடிய” உள்ள தினத்தினை புத்தாண்டு தினமாக கொண்டாடியுள்ளனர். கடைசி நாளான “ஏப்பிரல்-1”ல் புத்தாண்டு பிறப்பதாகவும் ஒரு வாரத்திற்கு முன்பே புத்தாண்டினை வரவேற்க மக்கள் தயாராக இருக்க விடுமுறை விடப்பட்ட வரலாறும் உண்டு. பிரான்சின் (Edit of Roussillion) ரோசோலியன் என்பவர்தான் இந்த புத்தாண்டு குழப்பத்திற்கு தீர்வு கண்டவர். மக்கள் அனைவரும் புத்தாண்டினை பொதுவாக ஒரே தினத்தில்தான் கொண்டாட வேண்டும் என , “ஆகஸ்ட் 9, 1564”ல் ஒரு முடிவினை தெரிவிக்கின்றார். அந்த முடிவுதான் புது ஆங்கில புத்தாண்டு தினமாக இன்று வரை பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் “ஜனவரி 1”. அதன் பிறகு யூதர்கள் “டிசம்பர்-25”னை கிருஸ்து பிறந்த தினமாகவும் “ஜனவரி 1”னை கிருஸ்துவுக்கு பெயரிடப்பட்ட தினமாகவும் கொண்டாடி ஆருதல் அடைகின்றனர். இருப்பினும் 18 ஆம் நூற்றாண்டு வரை பிரான்சில் சில பகுதி மக்களும் ஐரோப்பிய மக்களும் “ஏப்பிரல் 1”னை விடுவதாக இல்லை. “ஏப்பிரல்-1”யைத்தன் புத்தாண்டாக கொண்டாடி வந்துள்ளனர். “சித்திரை-1”க்கும் “தை-1”க்கும் இருக்கும் சண்டை சச்சரவுகள் போலவே “ஏப்பிரல்-1”க்கும் “ஜனவரி-1”க்கும் இருந்துள்ளது. “ஏப்பிரல் 1”னை புத்தாண்டாக கொண்டாடுவேர் முட்டாள்கள் என விவாதம் முற்றிப்போக “ஏப்பிரல்-1” முட்டாள்கள் தினமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

சரி இப்போது தமிழ் புத்தாண்டு பிரச்சனைக்கு வருவோம். இதில் யார் முட்டாள்கள் என பார்த்துவிடுவோம்.

“சித்திரை-1”னை தமிழ் புத்தண்டு என சொல்பவர்கள் சொல்வதென்ன??
பெரும்பாலும் ஒரு மாதத்தில் பவுர்ணமியானது (தமிழில் முழுநிலவானது) எந்த நட்சத்திரமோ, அந்த நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராக இருக்கும்.
பவுர்ணமி அன்று நட்ஷத்திரம்
மாதத்தின் அசல் பெயர்
தமிழில் மருவியது
சித்ரா நட்ஷத்திரம்
சித்ரா
சித்திரை
வைசாகம் விசாக நட்ஷத்திரம்
விசாகம் , வைசாகம்
வைகாசி
ஆநூஷி நட்ஷத்திரம்
ஆநூஷி
ஆனி
பூர்வ ஆஷாட நட்ஷத்திரம்
ஆஷாடம்
ஆடி
ச்ராவண நட்ஷத்திரம்
ச்ராவணம்
ஆவணி
பூர்வப்ரோஷ்ட நட்ஷத்திரம்
புரட்டாதி
புரட்டாசி
ஆச்சவயூத நட்ஷத்திரம்
ஆச்சவயூதம்
ஐப்பசி
கிருத்திகா நட்ஷத்திரம்
கிருத்திகா
கார்த்திகை
மிருக ஷீர்ஷ நட்ஷத்திரம்
மார்கசீர்ஷி
மார்கழி
சிஷ்ய நட்ஷத்திரம்
சிஷ்யம் – தைஷ்யம்
தை
மக நட்ஷத்திரம்
மகம்
மாசி
பல்குன நட்ஷத்திரம்
பல்குனம்
பங்குனி

உண்மையிலேயே வியக்க வைக்கின்றது. ஒவ்வொரு மாதத்தின் பெயரும் அந்த மாதத்தில் முழு நிலவின் போது உள்ள விண்மீனின் பெயர் என விளக்கியிருக்கின்றார்கள். எனக்கு ஏற்ப்படும் சந்தேகம் ஒன்றுதான். இது தமிழ் மாதத்தின் பெயரா? இல்லை சமஸ்கிருத மாதத்தின் பெயரா?? சமஸ்கிருதத்தில் இருந்து மருவினால் அது தமிழா?? சமஸ்கிருதத்தின் தவறான உச்சரிப்பைதானே இப்போது நாம் தமிழ் மாதமாக பயன்படுத்துகின்றோம்.

“Welcome” என்ற ஆங்கில சொல்லினை “வெல்கம்” என்று உச்சரிக்க வேண்டும். அதுதான் சரி. “வில்கொம்” என தமிழில் மருவி பயன்படுத்தினால் அதனை ஆங்கிலம் பேசுவோர் ஏற்பார்களா? இல்லை அது தமிழில் மருவியது, எனவே அது தமிழ் சொல்தான் என்றால் நாம் ஏற்போமா?? தமிழ் ஆண்டு என்றால் மாதங்களும் தமிழில்தானே இருக்க வேண்டும்.
 
அடுத்த ஒரு விளக்கம் வந்தது:
பூமி நீள் வட்ட பாதையில் சுற்றி வரும் போது அது தனது ஒரு சுற்றினை முடித்துக்கொண்டு அடுத்த சுற்றினை துவங்கும் புள்ளி உள்ள தினம்தான் “சித்திரை-1”

இது ஒருவகையில் ஏற்புடையது தான். துவங்கும் புள்ளியில்தானே ஆண்டும் துவங்க வேண்டும். அதுதானே முறை. ஆனாலும் எனக்கு இதிலும் சிறு சந்தேகம். நீள் வட்டத்தின் துவங்கும் புள்ளியை எப்படி கணித்தார்கள். வட்டத்திற்கு துவங்கும் புள்ளி எது? முடியும் புள்ளி எது??

பூகோல ரீதியான ஒரு விளக்கம் வியக்க வைத்தது அது.,
நீள்வட்ட பாதையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் போது, புமியின் (நாம் இருக்கும் பகுதியின்) மீது சூரியன் செங்குத்தாக பிரகாசிக்கும் தினமே ஆண்டு துவக்கம். அதுதான் “சித்திரை-1”.

சூரியன் மிக அருகிலும் செங்குத்தாக பிரகாசிக்கும் போதுதான் ஆண்டு துவங்க வேண்டும் என்பது என்ன கணக்கு? இதனை எப்படி ஏற்பது? இதை அப்படியே ஏற்றாலும் கூட. அதிலும் சிறு கேள்வி உண்டு. சூரியன் செங்குத்தாக பிரகாசிக்கும் போதுதான் ஆண்டு துவங்க வேண்டும் என்ற கணக்கு உண்டு எனில் சூரியன் செங்குத்தாக பிரகாசிக்கும் மதியம் 12 மணிக்குத்தானே புதிய (அடுத்த) நாள் துவங்க வேண்டும். நாம் வாழும் பகுதிக்கு தொலைவிலும் சூரியனின் பிரகாசம் இல்லாத போதும் தானே புதிய நாள் பிறப்பதாக கணக்கிடுகின்றோம். பூகோலத்தின் படி பார்த்தாலும் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் இரவில் நாள் துவங்கும் கணக்கினைபோலத்தானே சூரியன் தூரத்தில் இருந்து வெப்பம் குறைவான தினத்தினில் ஆண்டும் துவங்க வேண்டும்.

நாம் அனைவரும் நம் பிறப்பு முதல் பழகிய பழக்கங்களுக்கு அடிமைகளாகவே வாழ்ந்து பழகிவிட்டோம். வரலாறு என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நாம் செல்வதே இல்லை.

ஜூன் முதல் மே வரை கல்வி ஆண்டு என்றும்
ஏப்பிரல் முதல் மார்ச் வரை நிதி ஆண்டு என்றும்
இன்றைய கால கட்டத்தில் நாம் எப்படி பழகி வைத்திருக்கின்றோமோ.. அதே போலத்தான் ஆதியில் விவசாயத்தினை மட்டுமே தொழிலாக கொண்ட நமது தமிழ் சமுதாயம் விவசாய ஆண்டினை ஏற்றிருந்தது. அவர்களை பொருத்தவரை விவசாயமும் விவசாயத்திற்கு பேருதவி செய்யும் அந்த வானும் தான் கணக்கு. தமிழ் மாதங்களையும் கூட அவர்கள் விவசாயத்தினை குறித்தே வழங்கியிருப்பார்கள். அதற்கான தேடல் இன்னும் முழுமை அடையவில்லை. பன்னிரண்டு மாதங்களும் தமிழில் பெயரிட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சமஸ்கிருத மாதம்
தமிழில்
தை
சுறவம்
மாசி
கும்பம்
பங்குனி
மீனம்
சித்திரை
மேழம்
வைகாசி
விடை
ஆனி
ஆடவை
ஆடி
கடகம்
ஆவணி
மடங்கல்
புரட்டாசி
கன்னி
ஐப்பசி
துலை
கார்த்திகை
நளி
மார்கழி
சிலை


இந்த ஆண்டுக்கான போகம் நிறைவடைந்து அந்த ஆண்டு போகத்திற்கு பேருதவி செய்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தினமாக கொண்டாடப்பட்டு வந்ததே “சுறவம்-க (தை-1)”. அடுத்த போகத்தின் நுழைவாயிலாக இன்றைய தினத்தினையே பண்டைய தமிழர்கள் கருதியுள்ளனர். 260 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆங்கிலேய படையெடுப்பினால் “ஜனவரி-1”னை எப்படி நாம் கற்றுக்கொண்டோமோ., அதே போலத்தான் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வரும் ஆரிய ஆக்கிரமிப்பால் “சித்திரை-1”னையும் கற்றுக்கொண்டோம். கற்பது எதுவாக இருந்தாலும் நமக்கான வரலாற்றினைத்தானே நாம் ஏற்க வேண்டும்.

சரி, இந்த ஆரியர்கள் “சித்திரை 1”னை எங்கிருந்து பிடித்தார்கள்? அதன் காரணம் என்ன? 2500 ஆண்டுகளுக்கு முன் சைவர்-போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிளம்பியிருக்கின்றார்கள் என்பது நாம் அறிந்ததே. ஐரோப்பியர்கள் கொண்டாடிய “ஏப்பிரல் 1”க்கும் இவர்கள் கொண்டாடும் “சித்திரை-1 (ஏப்பிரல்-14)”க்கும் தொடர்பு இருப்பதன் காரணம் விளங்குகின்றது. இப்போதுதான் புரிகின்றது யார் முட்டாள்கள் என்று.

பெரும்பாலான நாடுகளால் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனவரியினை ஆரிய கலப்பிற்கு முன்பிருந்தே ஆதி முதல் பின்பற்றியவர்கள் தமிழர்கள். “தை-1 (ஜனவரி-14)” னை பூகோல ரீதியிலும் பண்டைய விவசாய இனக் குழு மக்களாலும் புதிய ஆண்டு துவக்கமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. நாமும் நம்முடைய பண்டைய பழக்கங்களைத்தானே பின்பற்ற வேண்டும்.

கருணாநிதி சொல்லிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் ஏற்று முட்டாளாகவும் கூடாது. கருணாநிதி சொல்லிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் எதிர்த்து ஜெயலலிதாவாகவும் கூடாது. எதனையும் ஆராய்ந்து அறிவோம்.
 


கொசுரு:-
நமது சொந்தங்களான ஈழ தமிழர்களும் “(சுறவம் க) தை 1” தினத்தினையே தமிழ் புத்தாண்டாக ஆதியில் இருந்து கொண்டாடி வருகின்றனர்.


உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
சு.ரகுநாத்.

3 comments:


  1. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
  2. கவிஞர் ஐயா அவர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. புவியின் பகலும் இரவும் ஒரு நாள்.
    நிலவின் வளர்பிறையும் (சுக்லபக்ஷம்) தேய்பிறையும் (கிருஷ்ண பக்ஷம்)சேர்ந்தது ஒரு மாதம்‌.
    சூரியனின் உத்தராயண 6 மாதமும் தக்ஷிணாயண 6 மாதமும் சேர்ந்தது ஒரு வருடம்.
    சூரியனின் உத்தராயண பயணம் துவங்கும் தையே நம் புத்தாண்டு.

    ReplyDelete