Friday 15 April 2016

போராட்டக் கல்வி – மூணாறு பயணம்

          போராட்டம் எனும் இந்தச் சொல் மிகப் பழமையான சொல்லாக தோன்றுகிறது. ஆதியில் ஒரு செல் உயிரியாக இருந்து படிப்படியாக பரிணாமம் அடைந்து மனிதனாக உருவாகிட பல்வேறு போராட்டங்களை இந்த இனம் நிகழ்த்தியிருக்கிறது. மனித விலங்காக மாறினாலும் தம் பரிணாமத்தில் இடையில் பிரிந்து வெவ்வேறு உயிராக பரிணாமித்துப் போன பல விலங்குகளிடம் இருந்து தன்னையும் தன் இனத்தையும் காப்பற்றிக் கொள்ள தொடர்ந்தது போராட்டம். அதன் பிறகு மனித இனத்திற்குள்ளாகவே இனத்தை வகுத்து தம்மைத் தாமே போரிட்டு தம்மிடம் இருந்தே தம்மை காத்துக் கொள்ள போராடுகிற காலமும் வந்து சேர்ந்தது. அந்தப் போராட்டம் இன்றும் ஓயவில்லை. தான் வாழ்வதற்கு ஆதாரமாக, தம்மை, தம் இனத்தின் உயிரை பிடித்து வைத்திருக்கும் ஆதாரத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு மனித இனமும் தம் போராட்டத்தை கை கொண்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு பேராபத்து என்கிற போது அதுவரை அமைதியாக இருந்திருக்கிற மனம் போராட்ட குணமாக வெடித்து எழுகிறது.


அப்படியான போராட்டங்கள் எழும் பொழுதெல்லாம் அவற்றை ஒடுக்கித் தடுத்திட வரலாறுகளில் பல யுக்திகள் எதிரிகளால் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன.
சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தினில் போரட்டங்களுக்கு எதிரான மனநிலையை, கருத்தியலை பரப்பிவிடும் நேர்த்தியான வேலைகளில் இறங்கியுள்ளனர் இந்த காலகட்ட எதிரிகளான கார்ப்ரேட்டுகள். தொலைக்காட்சிகள் வழியாக பரப்பப்படும், ‘சவன் அப்’ (7UP) குளிர்பான நிறுவனத்தின் விளம்பரங்கள் அதற்கு சிறு சான்று. மாணவர் போராட்டங்களை கொச்சைப்படுத்தி விளம்பரப்படுத்தியதை தொடர்ந்து, அழகிப் போட்டிகளின் காட்சி அமைப்பைக் கொண்டு அடுத்த கட்ட யுக்தியை தொடங்கியுள்ளது. அழகிப் போட்டியின் கடைசிகட்ட போட்டியில் தம் மனதில் இருப்பதை பேசவைக்கப்படுகிறார்கள் பெண்கள்.  பெண்கள் சமுதாயத்தை பற்றி பேசும் போது முகம் சுளிக்கிறார்கள் நடுவர்கள். அங்கு ஒரு பெண், தான் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று சொல்லும் பதிலை தேர்ந்தெடுத்து வெற்றி அறிவிப்பார்கள். சமூகத்தை பற்றி பேசுவதோ சிந்திப்பதோ போலியானது, அர்த்தமற்றது என்பதை நிறுவுவதே அந்த விளம்பரத்தின் கேவலமான உள் நோக்கம்.


இனங்களை பிரித்து தனித் தனி மனித எண்ணத்தை மனிதர்கள் மத்தியில் நிறுவுவதன் மூலம் புரட்சியோ, போராட்டங்களோ எங்குமே தலை தூக்கிவிடாமல் பார்த்துக் கொள்கிறது கார்ப்ரேட்டுகள். இதன் பலனாக அரசு ஊழியர்களது ஊதிய உயர்வுக்கான போராட்டங்களைக் கூட தனிமனித எண்ணம் கேலிக்குள்ளாக்குகிறது. கூடுதல் ஊதியம் பெறாமல் கூடுதல் நேரங்களிலும்; விடுமுறை தினங்களிலும் பணி சேய்து கிடக்கும் தனியார் துறையின் ஊழியர்கள், தங்களது உரிமைக்காக போராடும் அரசுத்துறை ஊழியர்களை சமூக வலைதளங்களில் கேலி பேசுவது தான் அதிக கேலிக்குறியது. அந்த அளவிற்கு இங்கு தனியார்துறை ஊழியர்களின் மனமும் அறிவும் கார்ப்ரேட்டுகளால் சலவை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுத் துறைகள் கையாலாகாதவை என்ற எண்ணத்தையும்; அதனைத் தொடர்ந்து தனியார்துறை சிறப்பானவை என்கிற கண்ணோட்த்தையும் நிறுவி தனது வியபாரத்தை கடைவிரித்துக் கொள்கிறது. அரசையும் ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு அரசுத்துறையையும் கிரயம் பேசத் துவங்கிவிட்டன கார்ப்ரேட்டுகள்.


ஊர்க்குருவிகளின் மூணாறு நோக்கிய பயணம்:

இந்த போராட்டங்களில் படித்தவர்களை விட கல்வியறிவுக்கு வாய்ப்பில்லாத கூலித் தொழிலாளிகளின் போராட்டங்கள் வரலாற்றுகளில் பதியப்பட்டே ஆக வேண்டும். அப்படியான போராட்டங்களில் ஒன்று தான் கடந்த ஆண்டு (2015-ல்) மூணாறில் கூலி உயர்வுக்காக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிகழ்த்திய போராட்டம். அந்த போராட்டங்களின் பின்புலத்தையும் அதற்கு உற்ற துணையிருந்தவர்களையும் அறிந்து கொள்ளும் நோக்கில் ஊர்க்குருவிகள் மூணாறு நோக்கி பயணித்தார்கள். அவர்களோடு இணைந்து நானும் மலையாளக் காற்றில் பறந்து திரிந்தேன்.



09-04-2016 மற்றும் 10-04-2016 இந்த இருதினங்களாக அமைந்திருந்தது இந்த பயணம். தேவிகுளத்தில் உள்ள “National Adventure Academy”-யில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எதிரே இருந்த சிறு உணவகத்தில் புட்டும் கடலையும் (சுண்டக்கடலை, கொண்டைக்கடலை) மிகப் பிரமாதமாக இருந்தது. மாட்டு இறைச்சி வருவல் காட்ட சாட்டமாக செய்திருந்தார்கள். சீரகம் போடப்பட்டிருந்த சுடுதண்ணீர் குளிருக்கு இதமாக இருந்தது. மொழிக் குழப்பமும் இல்லை. தேவிகுளம், மூணாறு பகுதிகளில் தமிழர்களே அதிகமாக உள்ளனர். அதனால் தமிழ் பயன்பாடும் அதிகமாகவே உள்ளது. அதனை மீறி மலையாளமும் தமிழோடு நெருங்கிய தொடர்புள்ளதால் தொடர்புக்கான மொழி புரிந்து கொள்வது எளிதாக இருந்தது. உணவு, நீர், மொழி, தங்குவதற்கு இடம், கழிப்பறை வசதி அனைத்தும் கிடைத்துவிட்டதால் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் பயணத்தின் நோக்கத்தை மட்டுமே அனைவரது மனமும் எதிர்நோக்கியிருந்தது. இருந்த போதிலும் இந்த அத்தியாவசிய வரிசையில் இப்போது புதியதாக ஒன்று இணைந்துள்ளதே. கைபேசி காற்றலை. கைபேசிக்கான உயர் கோபுரங்கள் இப்போது அத்தியாவசிய பட்டியலுடன் இணைந்துவிட்டது.  BSNL தவிர வேறு எந்த தனியார் நிறுவன சேவையும் இந்த பகுதியில் இல்லவே இல்லை. தனியார் நிறுவனத்திற்கு அந்த அளவிற்கு சேவை செய்ய வலிமை இல்லை, பொதுத் துறையின் சேவை நமது வரிப்பணத்தால் உண்டாக்கப்பட்டது. நமது பொதுத் துறை நிறுவனத்தைத் தவிர வலிமையானது வேறு இல்லை என்கிற உணர்வே முதல் பாடமாக இருந்தது இங்கு.


தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன்:

          லாக்காடு எஸ்டேட்டில் அதிகமான பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்தே உரையாடலைத் துவங்கலாம் என்று அவர்களை நெருங்கினோம். அவர்களை நெருங்க நெருங்க அவர்கள் கைகளில் வைத்திருந்த கொழுந்து பறிக்கும் கத்தரியின் சப்தம் அதிகமாகக் கேட்டது. கத்தரியுடன் பிணைக்கப்பட்டிருந்த சிறு பைக்குள் கத்திரிக்கப்படும் கொழுந்துகள் சேகரமாகுமாறு வடிவமைத்திருந்தார்கள். அந்த சிறு பையில் கொழுந்து நிறைந்த உடன் தலையில் மாட்டப்பட்டு தன் முதுகுப் புறத்தில் தொங்கும் பெரிய அளவு பையில்அவற்றை கொட்டி நிரப்புகிறார்கள். தலையில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க கனமான சாக்கு ஒன்றை மடித்து வைத்து அதன் மேல் அந்த பெரிய பையினை மாட்டிவிட்டபடி பணி செய்கிறார்கள். சாந்தி, மணிமேகலை என்ற இரு தொழிலாளர்களிடம் பேசினேன். இங்கு தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து வந்தவர்கள் தான் இங்கு வேலையில் இருப்பதாக கூறினார்கள். “நீங்க தமிழ் பசங்களா இருக்கிறதால தான் நம்ம பசங்களேனு பேசுறோம்” என உரிமையோடு பேசத் துவங்கினார்கள்.


27 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் தினமும். கழிவு உட்பட 37 கிலோ பறித்தால் தான் 27 கிலோவாக கணக்கெடுத்து 300/- ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள் என்றார்கள். 58-வயதில் கட்டாய ஓய்வு கொடுக்கப்படுகிறது. அதற்கு மேல் வயதானவர்கள் வருமானத்திற்காக, நூறுநாள் வேலைக்கு சென்று வயிற்றை கழுவுகிறார்கள். எட்டு மாதங்கள் வரை மழை காலம் தான் இங்கு. மழைகாலங்களில் அட்டை பூச்சிகளும் முதலாளிமார்களுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளிகளின் ரத்தம் குடிக்கத் துவங்குகின்றன. அவ்வாறு அட்டை கடியில் இருந்து தப்பிக்க, கால்களை முழுவதும் மூடியபடியான ‘சூ’ போட்டுக் கொண்டு பணி செய்கிறார்கள். ஒரு சிலர் வருமானம் போதாமல் தேய்ந்த செருப்புகளுடனே கொழுந்து பறிக்கிறார்கள். காலை 8 மணி முதல் மாலை 4:30 மணி வரை கொழுந்து பறிக்க வேண்டும். காலை 8 மணிக்குள் இவர்கள் வர வேண்டும் என்றால் ஒன்றில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இவர்களது வீட்டில் இருந்து நடந்து வருகிறார்கள். மாலை 4:30 மணிக்கு பறித்த கொழுந்துடன் தொழிற்சாலைக்கு செல்கிறார்கள். அங்கு எடை போட்டு கொடுத்துவிட்டு வீடு வந்து சேர இரவு 8 மணி ஆகிவிடும். அதன் பிறகு இரவு உணவு தயார் செய்து  சாப்பிட்டு படுத்து, மீண்டும் காலை ஏழுந்து காலைக்கும் மதியத்திற்கும் உணவு தயார் செய்துவிட்டு காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து எஸ்டேட் நோக்கி நடக்கத் துவங்குகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு இங்கு ஓய்வு என்பதே இல்லை என சொல்லலாம். போதாக் குறையான வருமானத்திலும் தமக்கென இல்லாத நேரத்திலும் தம் குழந்தைகளை படிக்க வைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். பெரும்பாலும் தமிழ்நாட்டில் கம்பம் போன்ற பகுதிகளிலேயே வீடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கிறார்கள். கேரளத்தில் மலையாளத்தில் படிப்பதற்கு குழந்தைகள் சிரமப்படுவதாக காரணம் சொல்கிறார்கள்.

“இந்த மாசம் கடன வாங்கி பீஸ கட்டுவோம்., அடுத்த மாசம் சம்பளத்த வாங்கி கடன கட்டுவோம்!!” என அவர்கள் சிரித்தபடியே கூறினாலும் அதன் உள் இருக்கும் வலி குளிரை கிழித்து வெப்பமாக மனதில் இறங்குகிறது. இரண்டு கட்டமாக நடைபெற்ற போராட்டங்களில் இவர்கள் முதல் கட்ட போராட்டங்களில் மட்டும் கலந்து கொண்டதாக கூறினார்கள்.

“நாங்க போனஸ் போராட்டத்துல மட்டும் யூனியன் கூட நின்னு போராடுனோம். அடுத்து நடந்த சம்பள போராட்டத்துக்கு நாங்க போகல.. நாங்க போகலனாலும் அந்த போராட்டத்தால தான் எங்களுக்கு இப்ப 300/- ரூபாய் சம்பளம் கெடைக்கிது.” என்றார்கள். மாலை ஊரில் பெங்கல் திருவிழா இருப்பதால் இன்று மதியம் 1:30 மணியோடு பணி முடிந்துவிட்டதாக பறித்த கொழுந்துகளை தலையில் தூக்கி வைத்துவிட்டு கிளம்பினார்கள்.

“நைட்டு ஊருக்கு வாங்கப்பா.. பொங்கலுக்கு” என்று அழைப்பும் வைத்தார்கள்.


அவர்களின் அழைப்பை ஏற்று பொங்கல் திருவிழாவிற்கு இரவு 9 மணிக்கு மேல் உணவை முடித்துவிட்டு கிளம்பினோம். முளைப்பாரி வைத்து கும்மியடித்து பாட்டு பாடிக் கொண்டாடியபடி இருந்தார்கள். காடுகளை அழித்து தேயிலை பயிரிடப்பட்ட மலைகளுக்கு நடுவில் பாரம்பரிய விதைத் தேர்வை நிகழ்த்தும் முளைப்பாரி நிகழ்வு. எவ்வளவு பெரிய முரண். இப்படியான முரண்களை சூழ்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முளைப்பாரி எடுப்பதில் இருந்தே இங்கு வாழ்பவர்கள் பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. தங்கள் நிலங்களை எந்த முதலாளியிடம் இழந்து இந்த முதலாளிக்கு சேவகம் செய்ய வந்தார்களோ தெரியவில்லை. அவர்களது கோயிலில் பழமையான சிறிய கழுமரம் ஒன்று இருந்தது. அதில் கோழிகளை குத்திவைத்து பலியிடுவதாக கூறினார்கள். மற்றபடி அங்கு இருக்கும் பெண் தெய்வத்தின் கதை யாருக்கும் தெரியவில்லை. இரவினில் மலைகள் பிளக்க உருமி இசைக்க கரகம் தூக்கிக் கொண்டு வந்த ஆண்களின் பின்னே முளைப்பாரியை தூக்கியபடி பெண்கள் கடந்து போனார்கள்.

எஞ்சியிருப்பது இந்த கூலி உயர்வுக்கான போராட்டத்தின் பின்புலம்தான். அதற்காக அடுத்தடுத்து நாங்கள் சந்தித்த நபர்களையும் அவர்களது பார்வையில் போராட்டத்தின் தோற்றத்தினையும் பற்றிய புரிதல் சற்று முக்கியமானதாக இருக்கிறது.


போராட்டம் குறித்த கம்யூனிச கட்சி(CPM)யின் பார்வை:

        தோட்டத் தொழிலாளர்களின் கோயில் விழாவிற்கு செல்லும் முன்பே நாங்கள் தங்கிய இடத்திற்கு மோகன் அவர்களை வரவழைத்து பேசினோம். படவியில் (Camera) ஒளிப்பதிவு, கைபேசியில் ஒலிப்பதிவு என ஆயத்தமாக இருந்த எங்களை பார்த்தவர் சற்று பின்வாங்கிவிட்டார். தன்னால் போரட்டங்களை பற்றி விவரமாக சொல்ல முடியாது என்றும் பொதுவாக கூறுவதாகவும் கூறி பேச்சை துவங்கினார். இவரது தடுமாற்றமே பல முரண்கள் புதைத்துகிடப்பதை வெளிப்படுத்திவிட்டது. இவர் போராட்டங்களில் பங்கு பெறவில்லை என்கிற போதிலும் போராட்டத்தை முழுமையாக முன் நின்று கவனித்தவர். பொதுவாகவே பேச்சை துவங்கினார். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். “First of all I am proud to be a Dravidan” என ஆரம்பித்தார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பெரியாரை தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் பேசும் அண்ணன் தம்பிகள் சிலர் “தமிழ்நாட்டை விட்டு வெளியில் போய் யாரையாவது திராவிடன் என சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். இங்கு தான் இப்படி, அசிங்கம்.. கேவலம்” என பொங்கிக் கொண்டு இருந்தார்கள். இவர்களெல்லாம் எதற்கு இப்போது நினைவில் வருகிறார்கள்!! நாம் வந்த வேலையை கவனிப்போம்.


          எந்த மொழி ஊடகமாக இருந்தாலும் செய்திகளை சலவை செய்தே வெளியிடுகின்றன. அதனால் அந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிய களத்தில் இறங்குவதே சிறந்தது என்றார். தேவிகுளத்தில் இருந்து 40கிலோமீட்டர் தூரத்தில் இடமலைக்குடி என்கிற பழங்குடிகள் வாழும் கிராமத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் செயல்பாடுகளை விளக்கினார். பல்லுயிர் பெருக்கத்திற்காக, அங்கு வெளிநபர்கள் யாரையும் அனுமதி இன்றி அனுமதிப்பதில்லை என்றார். ஆனால் எம் ஜி ஆர் ஆட்சிக் காலத்தில் பல்லுயிர் பெருக்கத்திற்கு பழங்குடிகள் தடையாக இருப்பதாக சொல்லி உசிலம்பட்டி அருகில் உள்ள மலைகளில் இருந்து அடித்து விரட்டி கீழ் இறக்கப்பட்டார்கள் என்கிற ஒரு வார காலத்திற்கு முன்பான எனது பயணக் குறிப்பு நினைவுக்கு வருகிறது. கேரளாவில் பழங்குடிகள் அந்த மண்ணிலேயே வாழ்கிறார்கள். பழங்குடிகளால் பல்லுயிர்களுக்கு ஆபத்து இல்லை.. வெளி நபர்களாலேயே ஆபத்து என்று கேரள அரசு புரிந்து வைத்திருப்பது பாராட்டுக்குறியது.


          1847-ல் தேயிலை பயிர் தென்னிந்தியாவில், வால்பாறையில் அறிமுகம் செய்யப்படுகிறது. 1887-ல் மூணாரில் பார்வதி எஸ்டேட்டில் முதன்முதலாக பயிரிடப்பட்டது. ஜான் டேனியல் மூணார் என்கிற பிரிட்டீசரால் (Madras Plantation Company – MPC) இங்கு தேயிலை பயிர் துவங்கப்பட்டதால் இந்த பகுதி அவருடைய பெயரால் மூணார் என அழைக்கப்படுவதாக கூறினார்.


          போராட்டங்கள் குறித்து கூறுகையில் “வட இந்தியாவை விட தென் இந்தியாவில் போராட்ட குணம் குறைவுதான். அதற்கு வரலாற்றில் இருந்து தான் ஆதாரம் சொல்ல வேண்டும். வரலாற்றில் வட இந்தியாவில் நிகழ்ந்த போராட்டங்கள் அளவிற்கு தென் இந்தியாவில் போராட்டங்கள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. நமக்கு போராட்ட குணம் குறைவாக இருப்பதற்கு நமது மரபணு கூட காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் கேரளாவில் போராட்ட குணம் அதிகம். எந்த ஒரு பிரச்சனையானாலும் ரோட்டிற்கு வந்து போராட வந்துவிடுவோம். பாலியல் தொந்தரவுகள் துவங்கி, குடும்ப பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் எல்லாமே துணிச்சலாக பொது வெளிக்கு வந்துவிடும். குறிப்பாக கட்சி அலுவலகங்களே அதற்கான தீர்வுக்களமாக அமையும். மற்றபடி மொழிப் பாகுபாடு இங்கு அறவே இல்லை. தமிழர், மலையாளி என்கிற பாகுபாடுகள் இல்லவே இல்லை.” என்றார். ஏனோ அதே அண்ணன் தம்பிகள் மீண்டும் நினைவிற்கு வந்து நிற்கிறார்கள். வடுக வந்தேறி, கன்னட வந்தேறி, மலையாள வந்தேறி என வார்த்தைகள் எல்லாம் எதற்கு என் நினைவுக்கு வர வேண்டும்!? நாம் விசயத்திற்கு வருவோம்.


          “போராட்டங்களை குறித்து சொல்ல வேண்டுமென்றால், இங்கு நடந்த போராட்டம் பெண்களால் நிகழ்ந்தது அல்ல; அதற்கு பின்புலத்தில் பக்கபலமாக பலர் இருந்தனர் (அவர்கள் யாரென அவர் கடைசி வரை தெளிவுபடுத்தவில்லை.) பெண்கள் காலையில் 8 மணிக்கு வந்துவிட்டு மாலை 5 மணிக்கு போராட்டத்தை முடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். மீண்டும் அடுத்த நாள் டூர் போவது போல பெண்கள் கிளம்பி வருவார்கள். இப்படியாக நடந்த போராட்டத்தை நாங்கள் (CPM) தான் திசைமாற்றினோம். அச்சுதானந்தனை வரவழைத்தது எங்கள் யூனியன் தான். அவர் வந்து இரவு 10 மணி வரை போராட்ட களத்தில் இருந்தார். அதனால் பெண்களும் இருந்தனர். ஊதிய உயர்வு போராட்டம் அவர் மூலமாகத்தான் தீர்வை எட்டியது.” என்றார்.


          இதே குற்றச்சாட்டை தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் (CPM) அவர்களும் முன்வைத்தார். இவர் தேவிகுளம் சட்ட மன்ற தொகுதியில் கடந்த இரு முறை வெற்றி பெற்றுள்ளார். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். அவரை சந்தித்து பேசிய போது “பெண்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால் அவர்கள் அந்த போராட்டங்களை தங்கள் ஓய்வுக்களமாக பயன்படுத்திக் கொண்டனர்.” என்றார். கம்யூனிசவாதிகள் போராட்டங்களை இவ்வளவு கொச்சைப்படுத்தி நேருக்கு நேராக பார்த்த தருணங்கள் இவை. அதுவும் பெண்களால் எதுவும் நிகழவில்லை என்கிற பேச்சு ஆணாதிக்க பேச்சாகவே என் மனதில் பட்டது. தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் போராட்டம், நியூட்ரினோக்கு எதிராக பொட்டிபுரம் மக்களின் போராட்டங்கள் என எதிலும் மக்களுடன் நிற்காத தமிழக கம்யூனிச கட்சிகள் இப்போது நினைவுக்குள் வந்து நிற்கிறார்கள். மரபுகளை குறித்து இலக்கியங்கள் குறித்து பேசும் இவர்களின் தமுஎகச போன்ற எழுத்தாளர் கலைஞர் சங்கங்களும் இலக்கியங்களில் உள்ள “ஈழம்” என்கிற சொல்லைக் கூட உச்சரிப்பதில்லை.
 

எத்தனையோ விவசாயிகளின் போராட்டங்களில் மக்களுடன் நிற்கும் தமிழக கம்யூனிஸ்ட்டுகள் போலவே கேரள கம்யூனிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள். அரசியிலில் மாற்று சக்தி இவர்கள் தான். இவற்றில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் பேச்சுக்களிலும் தொடர்ந்து ஈடுபடும் போது கம்யூனிசத்தின் மீதே சாமானியனுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்பதனையும் உணர வேண்டும்.


சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களது சந்திப்புக்கு முன்பே நாங்கள் போராட்டத்திற்கு காரணமான போராளிகளை சந்தித்து இருந்தோம். அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முன்பே பதில் அளித்துவிட்டனர்.


போராளிகளுடன் சில நிமிடங்கள்:

        2015-ஆம் ஆண்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போரட்டங்கள் இரண்டு கட்டமாக நிகழ்ந்துள்ளன. முதல் கட்ட போராட்டம் போனஸ் உயர்வு வேண்டி நிகழ்ந்துள்ளது. தொழிற் சங்கங்களின் தலைமையில் முதல்கட்ட போராட்டம் நிகழ்ந்துள்ளது. இதில் CPM உட்பட மூன்று தொழிற்சங்கங்கள் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரசு தொழிற்சங்கம்) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்ட களத்தில் தான் கோமதி அவர்கள் சக தொழிலாளர்களுக்கு அறிமுகம் ஆகிறார். கோமதி தேயிலை தோட்ட தொழிலாளர் அல்ல. அவர் TATA தேயிலை தொழிற்சாலையில் (Packing Section-ல்) பணிசெய்து கொண்டிருந்தவர். தோட்ட தொழிலாளர்களின் சமரில் கலந்து கொள்கிறார். (போராட்டத்திற்கு இவர்கள் சமர் என்கிற சொல்லை பயன்படுத்துகிறார்கள். இனி சமர் என்று பதிவிடுவதே சரியானது என எண்ணுகிறேன்) இவரைப் போலவே மனோஜ் என்கிற போராளியும் இந்த நேரத்தில் அமைதியாக தனது கட்ட பணிகளை செய்யத் துவங்கியிருக்கிறார். இவர் TATA தேயிலைத் தொழிற்சாலையின் அலுவகப்பணியில் பதிப்புத் துறையில்(Printing Section-ல்) பணியில் இருந்தவர். தொழிலாளர்களுக்கு 10% போனஸ் கொடுப்பதற்கான ஒப்பந்தங்களை பிரதி (Print) எடுப்பதற்கு அவரது நிறுவனம் ஆகஸ்ட்-19 ஆம் தேதியே இவருக்கு பணி கொடுத்துவிட்டது. ஆனால் ஆகஸ்ட்-22 ஆம் தேதி தான் தொழிற்சங்கங்ளுடன் வருடாந்திர பொதுக் கூட்டம் (annual generalbody meeting) நிகழ்கிறது. ஒருபுறம் 20% போனசுக்காக தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை போராட்டக் களத்தில் நிறுத்திவிட்டு அதற்கு முன்பே மறுபுறம் கார்ப்ரேட்டுடன் 10% போனசுக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்ட தோற்றம் தான் பச்சையாக தெரிகிறது.

கொழுந்து பறிப்பதை (Protection) குறைக்கச் சொல்கின்றன தொழிற்சங்கங்கள், அதன் பிறகு மூன்று தினங்களில், தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இருப்பது நாம் தொழில் செய்யும் நிறுவனம் தான் எனவே கொழுந்து பறிப்பதை குறைக்காதீர்கள் என தொழிலாளர்களிடம் பேசுகிறது. ஆகஸ்ட் -22 ஆம் தேதி (9-ஆம் நாள் போராட்டத்தில்) கண்ணன் தேவன் நிறுவனம் 2013-14 ஆண்டுகளில் 19% கொடுக்கப்பட்டதை 8.33% ஆகதான் போனஸ் வழங்க முடியும் என அறிவித்தது. இப்படியாக இந்திய கம்யூனிஸட் கட்சியின் தொழிற் சங்கமான AITUC, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான CITU மற்றும் காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கமான INTUC போன்றவை தங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லாமல் தொழிலாளர்களை கைவிட்டுவிட்டன என்றேதான் சொல்ல வேண்டும்.


இரண்டாம் கட்ட போரட்டம்:

          இந்த சூழலில் தான் முதன் முதலாக கோமதி அவர்களும் மனோஜ் அவர்களும் சந்திக்கிறார்கள். எந்த ஒரு தொழிற்சங்கத்தின் தயவும் இல்லாமல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ‘பெண்கள் ஒற்றுமை’ என்கிற அமைப்பின் கீழ் சுயமாக இரண்டாம் கட்ட போராட்டத்தை துவங்குகின்றனர்.
“மொத நாளுலாம் யாருமே வரல நானும் தம்பி மனோஜ்ம் மட்டும் உக்காந்திருக்கோம். எங்களுக்கு அழுகையே வந்துடுச்சி. இவுங்களுக்காக நாம வந்திருக்கோம். ஆனா இவுங்க வரலயேனு.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா ஆளுங்க வந்திட்டாங்க” என்றார் கோமதி.


“தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் போனசுக்காக 12,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் எங்களது போராட்டத்தில் 5000 தொழிலாளர்களுக்கு சற்று அதிகாக கலந்து கொண்டனர். தொடர்ச்சியான போராட்டங்களால் வருமானத்தை இழப்பவர்களால் கலந்து கொள்ள இயலவில்லை. அது போக தொழிற்சங்கங்களில் இருப்பவர்கள் சங்கத்தினை எதிர்த்து எங்களுடன் இணைந்து போராட தயக்கம் கொண்டனர்.” என்றார் மனோஜ்

          20% ஊக்கத் தொகையும் (Bonus) 500/- ரூபாய் ஊதியமும், தினமும் 21 கிலோ தான் கொழுந்து பறிக்க இயலும் என்பது தான் இவர்களது கோரிக்கையாக இருந்தது. போராட்டம் வீரியமாக வீரியமாக தனித்து செயல்படும் தொழிலாளர்கள் மேல் நிறுவனங்களுக்கு இருந்த கோபத்தை விட தொழிற்சங்கங்கள் தான் அதிக கோபத்துடன் செயல்பட்டுள்ளனர். ஊடகங்கள் ஊகங்களை கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தன. மலையாளப் பத்திரிகையான மனோரமா, “தமிழ் தீவிரவாதிகளின் போராட்டம்” என எழுதியிருக்கிறது. மலையாள தொலைக்காட்சி ஊடகங்களும் தன் பங்கிற்கு போராட்டங்களை ஒடுக்குவதற்கான வேலைகளை தொடர்ந்ததும், போராட்டக்காரர்கள் பத்திரிகையாளர்களை போராட்ட களத்திற்குள்ளயே விடாமல் தடுத்திருக்கிறார்கள்.

          “தமிழ் ஊடகங்கள் யாராவது வரமாட்டாங்களானு தான் நாங்க எதிர் பார்த்துட்டு இருந்தோம். ஆனா கடைசி வரை வரல” என கோமதி அவர்கள் சொல்லும் போது ஏக்கம் மேலோங்கியிருந்தது.
         

          “தமிழக ஊடகங்களை நீங்க எதற்காக எதிர்பார்த்தீங்கனு தெரிஞ்சிக்கலாமா! தமிழக அரசிடம் இருந்து உங்களுக்கு ஆதரவு ஏதாவது கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?” என ஊர்க்குருவி தோழர் ஒருவர் கேள்வியை முன் வைத்தார்.


          “அந்த மாதிரி எந்த ஆதரவும் கிடைக்காதுனு எங்களுக்கு முன்னமே தெரியும். ஆனா செய்தி தமிழகத்துல அதிகமா பரவும் போது இங்க போராட்டத்திற்கான தீர்வு வேகமா கிடைக்கலாம்னு எதிர்பார்த்தோம்.” என்றார் கோமதி.


          “அப்படி இருந்தும் புதியதலைமுறை செய்தியாளர் வந்திருந்தார். ஆனா அவர் கூட்டம் வரனும் அத காட்டி அவர் சேனலோட டிஆர்பி ரேட்டிங் கூட்டனும்னு தான் யோசிச்சிட்டே இருந்தாரே தவிர எங்களோட உணர்வுகள புரிஞ்சிக்கல. நாங்க அவரையும் கடைசிய போராட்டகளத்துல உள்ள விடல.” என்றார் மனோஜ்


          500 ரூபாய் கூலி உயர்வு சாத்தியப்படாது என்பதை உணர்ந்தவர்கள், ஏனைய போராட்டக்காரர்களின் சம்மதத்தின் பெயரில் 385/- ரூபாய்க்கு பேசத் துவங்கினர். இந்த நிலையில் இவர்களின் போராட்டங்களை மலையாள ஊடகங்களில் பேச, தகவல் தொடர்புக்கு லிசி என்கிற மலையாள பெண் தொழிலாளர் ஒருவரை இவர்கள் நியமித்திருந்தனர். ஆனால் இவர் போராட்டக்காரர்களின் அனுமதியில்லாமல் ஊடகங்களில் 350/- ரூபாய் என சொல்லிவிட, இறுதியில் இதனாலேயே நிறுவனத்தின் தரப்பில் 301/- ரூபாயாக அதனை முடிவு செய்துவிட்டனர். 8-ஆம் நாள் போராட்டத்திலேயே அனைத்தும் கை கூடி வருவதை உணர்ந்தனர். 9-ஆம் (இறுதி) நாளில் அச்சுதாணந்தன் வந்ததும் போராட்டம் முடிவுக்கு வரவும் சரியாகவே இருந்திருக்கிறது. இறுதியாக ஊதியம் 231/- ரூபாயில் இருந்து 301/- ரூபாயாகவும், ஊக்கத்தொகை 20%-ம் கிடைத்தது. கொழுந்து பறிப்பது 27 கிலோவாக முடிவாகியது.


          “இந்த போராட்ட காலங்களில் எங்களது போராட்டத்திற்காக உம்மன்சாண்டி அரசு இறங்கி வரவில்லை. கேரளாவின் டூரிசம் பாதிக்கப்படுகிறது என்பது ஒன்று, அச்சுதானந்தன் அவர்கள் வருகை தந்தது மற்றொன்று.” என்று மனோஜ் கூறுகிறார். இது போக கம்யூனிஸ்ட்டுகள் வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு கொஞ்சம் ஆக்ரோசமாகவே பதில் அளிக்கிறார்.


“முதல் கட்ட போராட்டத்துல 12,000 பெண்கள் கலந்துகிட்டாங்க, இரண்டாவது கட்ட எங்களோட போராட்டங்கள்ல 5,000 பெண்கள் கலந்துகிட்டாங்க. அவங்கள ரோட்டுல உக்கார வச்சி போராட்டம் பண்ணீட்டு இருக்கோம். அவங்களோட கழிப்பறை வசதிய பத்தி இவுங்கள்ல யாராவது யோசிச்சாங்களா!!?? அவுங்க எவ்வளவு நேரம் அடக்கிக்கிட்டு உட்காந்து இருப்பாங்க!! ஒதுங்கக் கூட இடம் இல்லைனாலும் தினமும் போராட்டங்களுக்கு வந்தவங்க!!. அவங்களா, பொழுது போகாமலும், ஓய்வெடுக்கவும் போராட்டத்திற்கு வந்திட்டு போறாங்க!!” என்றார்.
         

அச்சுதாணந்தன் வந்து சென்றதை பெருமையாக பேசும் கம்யூனிஸ்ட்டுகள், “அவர் நைட் 10 மணி வரை உட்கார்ந்திருந்தார். ஆனால் பெண்கள், தினமும் 8 மணிக்கு வந்துட்டு 5 மணிக்குலாம் கிளம்பிடுவாங்க” என மேம்போக்காக பேசிச் செல்கிறார்கள். சாதாரணமாக பெண்களின் இயற்கை உபாதையைப் பற்றியான அடிப்படை புரிதல் கூட இல்லாமல் என்ன கம்யூனிசம் படித்தார்கள் இவர்கள் என்பது தான் எனது கேள்வி. அது போக ஒன்பது நாட்களும் அதற்கு முன்பு தொழிற்சங்கங்களின் சமரிலும் கலந்து கொண்ட பெண்களை விட ஒரே ஒரு நாள் வந்து அமர்ந்த அச்சுதாணந்தனை மட்டுமே இவர்கள் கொண்டாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மாத கால ஊதியத்தை பொருட்படுத்தாமல் சமர் புரியும் பெண்கள் இந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு, பொழுது போக்கிற்காக வந்து போனவர்களாக தெரிகிறார்கள் என்றால் இங்கு யாருக்கு பார்வைக் கோளாறு என்பது நன்கு தெளிவாகிறது.
 
       
       காங்கிரசு முதல்வர் உம்மண்சாண்டியும் சாதாரண மனிதர் அல்ல. இந்த ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை போன்றவற்றால் டாடா மற்றும் கண்ணன் தேவன் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு ஈடாக சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார்.

1.   5000 ஏக்கர் அரசு நிலத்தை தொழிற்சாலைகள் (Industrial purpose) கட்டிக் கொள்வதற்காக வாரிக் கொடுத்துள்ளார். அது போக,

2.   விற்பனை வரி (Sales Tax) - தேயிலை விற்பனைக்கான வரி, நில வரி (Land Tax) – தேயிலை பயிரிடப்பட்டுள்ள நிலத்திற்கான வரி, கட்டிட வரி (Building Tax) – தொழிற்சாலை கட்டிட வரி போன்ற அனைத்து வரிகளும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்
         

          மனோஜ், சந்திப்பின் ஆரம்பத்தில் ஒரு வார்த்தை சொன்னார் அது எவ்வளவு உண்மை என்பதை இறுதியிலேயே புரிந்து கொண்டேன். அது “India is ruling by corporate”. இந்தியா தனியார் நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகிறது என்பதே அந்த வாசகம்.


           அதனைத் தொடர்ந்து வந்த பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்தில் கட்சி சார்பற்று கோமதி அவர்கள் அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜில்லாவிற்கு நின்று மனோஜ் தோல்வியை தழுவியிருந்தாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்துள்ளார்.


   கம்யூனிஸ்ட்டுகளை குறித்தும் காங்கிரசை குறித்தும் சரமாரியாக குற்றச்சாட்டு வைக்கும் மனோஜ் அவர்களும், கோமதி அவர்களும் இப்போது இருப்பது என்னவோ கம்யூனிஸ்ட் கட்சியில் (CPM) தான். என்ன காரணம் என்கிற கேள்விக்கு அவர் அளிக்கும் பதில்கள் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் என்பதை மறுபரிசீலனை செய்து பார்க்கச் சொல்கிறது மனம்.


         போராட்டங்கள் முடிந்ததும் நிறுவன ரகசியங்களை வெளியில் கூறியது, நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டது என மனோஜ் அவர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்கிறது. மனோஜ் காவல்துறை உடன் இருந்த நேரத்திலேயே, அவர் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதற்கு கோமதி அவர்கள் உடந்தையாக இருந்ததாக இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். வழக்குகளில் இருந்து ஜாமீன் பெருவதற்காக தலைமறைவாக இருந்த நேரங்களில், மலையாளப் பத்திரிகைகள், இவ்விருவரும் அதிமுகவில் ஆளுக்கு இருபது கோடியும், இரண்டு கார்களும் பெற்றுக் கொண்டு அந்த கட்சியில் சேர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.

    
    மனோஜ் அவரது உடன் பிறந்த தங்கையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் அவரது பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை என்றும், மனோஜ்ம், கோமதியும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள் என்பது வரை பல்வேறு செய்திகள் வதந்திகளாக பரப்பப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பொய்யாக்கிட வேறு வழியில்லாமல் இருப்பதிலேயே கொஞ்சம் ஆதரவு கொடுத்த ஆட்கள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் 8, ஜனவரி 2016-ல்  பாதுகாப்பிற்காக இணைந்துவிட்டோம். என்று மிக வேதனையாக பதிவு செய்கிறார்.


     ஜவகர்லால் நேரு பல்கலைக்கலகத்தில் காண்டம்கள் இருப்பதாக கூறிய ஆர் எஸ் எஸ்-ன் பங்காளி பிஜேபி-யை போல கேரளத்தில் காங்கிரசும் பல்வேறு வித்தைகளை கையாண்டுள்ளது.


     ஊதிய உயர்வை வெறும் ஊதிய உயர்வாக மட்டும் பார்க்காமல் அந்த உயர்வு அடிப்படை சம்பளத்தில் (Basic Pay) உயர்த்தப்பட வேண்டும் அப்போது தான் PF (provident Fund)ம் உயரும். தொழிலாளர்களது ஓய்வுக் காலங்களில் அவர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்று எதிர்கால திட்டமிடலோடு செயல்பட்ட மனோஜ்ம் கோமதியும் இப்போது அவர்களது எதிர்கால அரசியல் வாழ்க்கையை சரியாக திட்டமிடவில்லை. அவர்கள் ‘என் ஜி ஓ’ ஒன்றை துவங்கி ஏழை மக்களுக்கான சேவை செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர். இவ்வளவு பெரிய போராட்டங்களை நிகழ்த்திவிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டு அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் இப்போது பின்னோக்கி நகர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஊர்க்குருவிகள் கேட்டுக் கொண்டனர்.


    மனோஜ் உடைய சில போராட்டம் தவிர்த்து சில கருத்தியல்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டே ஆக வேண்டும். அவற்றைக் குறித்து தனியாக எழுதுவது சிறந்தது என நினைக்கிறேன்.

    
     நாங்கள் விடைபெறும் போது “இந்த வருசம் ஆகஸ்ட்லயும் போனசுக்கான சமர் வரும்” என்றார் கோமதி மலர்ச்சியான முகத்தைக் காட்டி சிரித்துக் கொண்டே..


அன்பும் நன்றியும்
பாடுவாசி


No comments:

Post a Comment