எத்தனையோ காதலிகள் தன்னை வேண்டமென்று ஒதுக்கிய போதும் காதலை விட்டு
ஒதுங்கிட திராணியற்றவன், தன் ஒன்று விட்ட மைத்துனச்சியின் மணவிழாவில் மீண்டும் பெண்
தேட ஆயத்தமாகிறான். விடுமுறைநாளில் நிகழும் திருமணம் இது. எதிர்பார்த்ததையும் விட இளம்
பெண்களின் வரத்து சற்று அதிகமாகவே இருந்தது. இவ்வளவு திரளான கூட்டத்தில் இரட்டைச் சடையில்
எந்த ஒரு இளம் பெண்ணும் கண்ணில்படவில்லை. தாவணியில் ஒரு பெண்ணும் சேலையில் சில பெண்களும்
சுடிதாரிலேயே பெரும்பாலான இளம் பெண்களுமாக மண்டபத்தினை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.
அரக்க பறக்க சுற்றிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் இளம் பெண்களின்
கும்பல் ஒன்று மட்டும் தீவிர அரட்டையில் லயித்திருந்தது. அவர்களுக்குள் சம்பந்தம் இல்லாமல்
பேசிக்கொள்வதும் கக்கபுக்கெ.. கக்கபுக்கெ... என சிரிப்பதுமாகவும் பெரியவர்கள் யாரேனும்
கடக்கும் போது சிரிப்பையும் பேச்சையும் அடக்கிக் கொள்வதுமாகவும் இருந்தார்கள்..