Sunday, 11 October 2015

பழங்குடிகள் பாதுகாக்கும் வரலாறு – கோத்தர் மலை2

          தாயின் நீர்க்குடத்துக்குள் குழந்தை மிதப்பதைப் போல வள்ளுவர் நகர் சமுதாயக்கூடத்திற்குள் கிடந்தோம். சுற்றிலும் பனி. இருண்ட மலைகளுக்கு இடையில் பூச்சிகளும் தவளைகளும் சோழி குழுக்கிக் கொள்ளும் சப்தம் சுற்றிலும் இருளுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தது. சற்று விடிய பறவைகள் தங்களது தாய் மொழியில் பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் திரியத் துவங்கின. இந்த பனியில் கம்களிகளைச் சுற்றாமல் இவைகளால் எப்படி சுற்றித்திரிய இயல்கிறதோ!!



         படவியை கையில் எடுத்துக் கொண்டு சூரிய உதயத்தை எடுக்க முயற்சித்து இளஞ்சிவப்பு மேகங்களை மட்டுமே படமாக்க இயன்றது. செடி கொடிகள் மீதும் பனி சிந்திய ஈரம். வாகனக் கண்ணாடிகளில் படிந்திருந்த பனிப்படிமங்களை கண்டதும் பால்ய வயது நினைவு வர, எனது பெயரை எழுதிப் பார்த்தேன். யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அழித்தேன். அது கண்ணீராக வடிந்தது.

Tuesday, 6 October 2015

மலையகத் தமிழர்களின் பச்சை ரத்தம் - கோத்தர்மலை-1

          புத்தகங்களும் பயணங்களும் வாழ்வதற்கான காரணங்களை அர்த்தப்படுத்துகின்றன. இவை அமையாதவர்கள் இயந்திர யுகத்தில் சிக்கித் திணறுவதாகவே தோன்றுகிறது. அதே போன்ற கால இயந்திர சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருந்த என்னை மீட்டெடுத்தது “பசுமைநடை” என்பதை நான் எங்கும் பதிவு செய்வேன். பசுமைநடை எனும் கைகாட்டி பலகை எனது வாழ்க்கை பயணத்தின் திசையை திருப்பியிராவிட்டால், இன்று அரவிந்தன் என்கிற தோழமையும் அத்தோழமையின் மூலமாக “ஊர்க்குருவிகள்” எனும் தோழர் வட்டத்தோடு இந்த கோத்தகிரி பயணமும் வாய்த்திருக்காது.


          
          திருமங்கலத்தின் எனது வீட்டு வாசலில் இருந்து துவங்கியது பயணம். பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வந்த ஒருவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டிருந்தார் காவலர் ஒருவர். இன்னும் விடியவில்லை. பொழுதும் தான்.

Wednesday, 9 September 2015

மண்ணின் கீழ் அடியில் ஒரு கீழடி

           உலகின் பழைய நகரங்களை எல்லாம் பாருங்கள் அவை ஏதேனுமொரு ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் அல்லது குன்றுகள் சூழ அமைந்திருக்கும். உலகின் பழைய நகரங்களில் ஒன்றான மதுரையும் அப்படித்தான். பரங்குன்றம், பசுமலை, சமணமலை, நாகமலை, அழகர்மலை, ஆனைமலை என குன்றுகள் சூழ வைகை ஆற்றங்கரையில் உருவான கோட்டை நகரந்தான் மதுரை.

காலப்போக்கில் பழைய நகரங்கள் அழிந்து போகப் புதிய நகரங்கள் உருவாகின. கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் தம்மை இன்றளவும் நிலை நிறுத்திக்கொண்ட நகரங்கள் மிகச் சிலவே. தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களும் குறைந்தது 25 நூற்றாண்டு கால வரலாறு உடையவனவாக இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டிலும் மதுரை தனிச் சிறப்புகள் உடைய நகரமாகும்


Wednesday, 8 July 2015

கிடாரிப்பட்டி - அன்றும் இன்றும்

            வாழ்வின் சிறந்த சம்பாத்தியம் “மனிதர்கள்”. எண்ணங்கள் ஒத்துப் போகும் மனிதர்களை சம்பாதிப்பது அதிலும் அதி சிறந்தது. பள்ளியிலோ கல்லூரியிலோ எனது எண்ணங்களை ஒத்த மனிதர்கள் அமைந்ததில்லை என்பதை இங்கு நான் பதிவு செய்கிறேன். அந்த மனிதர்களூடான வாழ்வு முழுக்க கேலியும் கிண்டலும்  சில நேரங்களில் நல்ல நட்பாகவும் இருந்து கடந்துவிட்டது. இன்றும் பள்ளி கல்லூரி இறுதி நாட்களில் அம் மனிதர்களிடம் பெற்ற ஒவ்வொரு எழுத்துக்களும் சில நேரம் ரசிக்கவும் பல நேரம் அழுகவும் வைத்துவிடுகிறது. இருப்பினும் எண்ணங்களின் ஓட்டம் ஒத்துப் போனதில்லை என்பதே உண்மை.